வாழ்வை மேம்படுத்தும் வாசிப்பு - சிகரம் விஸ்வபாரதி

thH;it nkk;gLj;Jk; thrpg;g[ - rpfuk; tp!;tghujp

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும், மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆறு அறிவுடன் இயங்குவதுதான். இதில், ஆறாம் அறிவான பகுத்தறிவிற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது. காரணம், அதுவே மனிதனை இவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றது. ஒரு விசயத்தையோ அல்லது சூழ்நிலையையோ தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி பகுத்துப் பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவதே மனிதனுக்கு உண்டான சிறப்பு ஆகும். தான் கேட்ட, பார்த்த, வாசித்த, உணர்ந்த விசயங்களின் மூலம் பெற்ற அறிவைப் பயன்படுத்தியே மனிதன் தன்னுடைய செயல்களுக்கான யோசனையைப் பெறுகின்றான். இங்கே நாம் கேட்ட, பார்த்த, உணர்ந்த விசயங்களைக் காட்டிலும் நாம் வாசித்துத் தெரிந்துகொண்ட விசயங்களே அதிகம். காரணம் நாம் அதிக விசயங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கமுடியாது அதற்கு நேரமும் போதாது, முழுமையான விசயத்தையும் ஒருவரால் சரியாகக் கூறமுடியாது. அதேபோல் உலகில் நடைபெரும் அனைத்தையும் நாம் பார்க்கமுடியாது, அதற்குள் நம் வாழ்நாள் முடிந்துவிடும். மேலும் அனைத்து விசயங்களையும் நாம் உணரவும் முடியாது. ஆனால் வாசிப்பு அப்படி அல்ல அதன் மூலம் அனைத்து விசயங்களையும் முழுமையாக உடனே அறிந்துகொள்ள முடியும். நாம், நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். ஏனென்றால், வாசிப்பு ஒரு அறிவை வழங்கும் அமுதசுரபி அதன் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை அறிவார்ந்தவனாகக் கட்டமைக்கின்றது. வாசிப்பே ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கின்றது. காலையில் எழுந்தவுடன் நமக்கு வந்திருக்கும் காலைவணக்கத்தை வாட்ஸ்-அப்பில் படிப்பதில் தொடங்குகிறது நமது வாசிப்பு.

ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்றால் அது மிகையாகாது. காரணம், மனித நண்பன் நேரத்திற்கு ஏற்றார்போல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்வான். ஆனால், ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய கருத்தில் மாறுவதில்லை. ஒரு கல்லை உளி செதுக்கிச் செதுக்கி அழகிய சிற்பமாக மாற்றுவதைப் போல். புத்தகம், வாசிக்க வாசிக்க நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக மாற்றுகின்றது. நமக்குத் தேவையான விசயஞானம் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நாம் வாழ்நாளில் தேவையான போது பயன்படுத்திக்கொள்ள முடியும். உலகில் நாம் பார்த்த பார்க்கின்ற தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக்கொண்டவர்களே. அதன் மூலம் பெற்ற அறிவைக் கொண்டே சிந்தித்தும், செயல்பட்டும், நம்மிடையே பிரபலமானார்கள்.  

பாடப்புத்தகங்களைத் தாண்டி

வாசிப்பது என்பது பாடப்புத்தகங்களுடன் நின்றுவிடாமல் அதைத்தாண்டியதாக இருக்கவேண்டும். பொதுவாக, பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் தங்களுடைய பாடப்புத்தகங்களைப் படிப்பதையே வாசிப்பு என்று தவறாக எண்ணுகின்றனர். அதுவே போதும் என்ற எண்ணத்தோடு நின்றுவிடுகின்றனர். ஆனால் அது அல்ல வாசிப்பு. பாடப்புத்தகங்களைத் தாண்டி இவ்வுலகில் பொதுவான அறிவை வழங்கக்கூடிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன அவற்றைப் படிக்கவேண்டும். உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறுபட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும். அனைவரும் தங்கள் குழந்தைகளிடம் வாசிப்பின் அத்தியாவசியத்தை உணர்த்தி அப்பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டிலேயே தங்கள் வசதிக்கு ஏற்ப சிறு நூலகம் அமைக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் இன்று பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.  எனவே, இன்று பாடப்புத்தகம் தாண்டிய பொதுஅறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

தத்துவ அறிஞர்கள்

அறிஞர் பெருமக்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது. நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.

வாசிப்பின் இன்றைய தேவை

கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்” என்ற பொன்மொழி வாசிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக விளக்குகிறது. இன்றைய இளையதலைமுறையினர் வாசிப்பதை நேசிப்பதில்லை. பாடப்புத்தகங்களைப் படித்து தேர்வெழுதி குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்று ஏதாவது ஒரு வேலைக்கு சென்றால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளனர். ஆனால் வேலைதேடிச் செல்லும் போதுதான் வாசிப்பின் அறுமை தெரியவருகிறது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தேர்வாளர்கள்  படித்தபாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காமல் பொதுஅறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவைகளையே சோதிக்கின்றனர். இவை அனைத்தும் எந்தப் பாடப்புத்தகத்திலும் இருப்பதில்லை. தன்னை சுற்றிலும் நடக்கும் விசயங்களைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும் இன்றைய வாசிப்பின் தேவையை.

புத்தகக் கண்காட்சி

இன்று பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன. புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளையும், மாணவர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு புத்தகங்களின் மீதான நாட்டத்தை உருவாக்க வேண்டும்.

சமூக வலைதளங்களின் தாக்கம்

முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை இன்றைய இளைய சமுதாயத்தினரின் பெரும்பாலான நேரத்தை விரயம் செய்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் இலவச இன்டெர்நெட் என்ற வலையில் வீழ்ந்து பெரும்பாலான நேரத்தை அதைப் பார்பதிலேயே செலவிடுகின்றனர். அனைவரும் வயது வேறுபாடின்றி செல்போனின் தொடுதிரைக்கு அடிமையாகிவிட்டனர். வீடு, பொதுவெளி என எங்கு பார்த்தாலும் அனைவரும் தங்களின் செல்போனை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதனால், இவர்கள் வாசிப்பு என்ற அறிவுத் தேடலை கற்றுக்கொள்ளாமலேயே போகின்றனர். உலக விசயங்களைத் தெரிந்துகொள்வதற்கும், நண்பர்களுடன் இணைப்பிலே இருப்பதற்கும் சமூக வலைதளம் முக்கியம்தான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் பொன்னான நேரத்தை தேவையில்லாத விசயங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் விரையம் செய்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டு அந்த அடிமை முறையிலிருந்து வெளியேற வேண்டும்.

முடிவாக, புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது. நம்முடைய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை நாம் வாசிப்பின் மூலம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றோம். நம்மிடமிருந்து எதிர்காலத் தலைமுறையினர் வாசிப்பின் மூலம் பெறவேண்டும். அதற்கு நாம் வாசிப்பை நேசிப்பதோடு நம் சந்ததிகளுக்கும் நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தகங்கள் வங்க செய்யும் செலவு, செலவு அல்ல மாறாக அது முதலீடே.


தொலை நோக்கு


தொலை நோக்கு

நிறைந்த மக்களுக்கு குறைந்த செலவில் 
சிறந்த படிப்பு.



நல்ல பழக்கத்தை இன்றே தொடங்குங்கள்!

நல்ல பழக்கத்தை இன்றே தொடங்குங்கள்!
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிறிய அலமாரியிலாவது கொஞ்சம் புத்தகங்களை வைத்திருங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்த உங்களின் தொழிலுக்குப் பயன்படக்கூடிய, உங்கள் குழந்தைகளின் நலனுக்கு வித்தாகும் புத்தகங்களை வாங்கி அடுக்குங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம், புத்தகம் படிப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியாக்கும். நம் குழந்தைகளுக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தூண்டுதலாய் இருக்கும்.

புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்!...


புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்!...
எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவு படுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும்...
செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.
நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-
மேற்கண்டதைப் படிக்கும் போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும் போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.
மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்து விடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.
நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்
1.திருவள்ளுவர் வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்று கோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்என்று கூறுகிறார்.
2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.
3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்அதாவது அறிவில் தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.
5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
6. மற்றவருடைய அனுபவங்களை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழி காட்டுபவையாக இருக்கும்.
7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்துஎன்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.
9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’
பதில்: நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லைஎன்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.
ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்
அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.
நிறைவுரை        
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!.


புத்தகம் படிப்பது எப்படி?

புத்தகம் படிப்பது எப்படி?
___________________________
புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.
இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.
நான் படிக்க துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்க துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.
இந்த கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (VirginiaWoolf )எழுதியிருக்கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது.
வர்ஜீனியாவின் கட்டுரை இந்த பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,
எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.
ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது.
வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதை பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.
ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கபோவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.
இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (perception) ,
இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்
மூன்றாவது கற்றல் (learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுதொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.
ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துபாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளபடாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படி தான் புத்தகங்களும்.
புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்
அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் தூய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப் படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாகயிருக்கிறது.
வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியதரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளபடாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.
ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயிற்சி தேவைபட்டதாக இருக்ககூடும்.
அல்லது அந்த கதையோ. கவிதையோ எதைப்பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தபட்டிருக்க கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இசையை போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன
வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம். என்று யோசிப்பதேயில்லை.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பிடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களை கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படி புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கபட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமில்லாமோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.
நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளை கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல. உடன் வேலைசெய்யும் ஒருவரை போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனை போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மை போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பதிற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.
ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிக குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்க கூடியது.
ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.
ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்து கொண்டேயிருப்போம்.
கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேச பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை
கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்து கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அது தான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பபடுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.
இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது.
புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுபடுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சன பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களை கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.
ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனஙகளை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாக பரிசீலனை செய்கிறான். விஞ்ஞான பரிசோதனை கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போல துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.
அதற்காக ரசனை சார்ந்து வாசிப்பு கைவிடப்படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையை கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனை போல காண்பதை தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியை போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.
புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிபார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போது தான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கபடுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினை கொண்டாடுகிறான்
வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும கற்பனை கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,
ஏய் வாசக உனக்கு தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலன் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.
வர்ஜீனியா வுல்பின் கட்டுரையை போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.
இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்று கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது.

ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னசிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்க துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன